மட்டக்களப்பு மாவட்டத்தில் அஞ்சல் வாக்களிக்கத் தவறியவர்களுக்குச் சந்தரப்பம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் அஞ்சல் வாக்களிக்கத் தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்கும் வகையில் செவ்வாய்க்கிழமை (11.08.2015) காலை 8.30 மணிமுதல் மாலை 2.30 மணிவரையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்டச் செயலாளருமான சறோஜினிதேவி சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே குறித்தொதுக்கப்பட்ட தினங்களில் தமது அஞ்சல் வாக்குகளை அளிக்க சந்தர்ப்பம் கிடைக்காத அஞ்சல் வாக்காளர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தில் வாக்களிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
கல்விப் பொதுத் தராதர பரீட்சைக் கடமைகள் பொறுப்பளிக்கப்பட்டதன் காரணமாக வாக்களிக்க முடியாமற் போகும் ஆசிரியர்கள் அதிபர்கள் மற்றும் கல்வி அலுவலர்கள்; 14ஆம் திகதி காலை 8.30 மணிமுதல் 11.30 மணிவரையில் அஞ்சல் வாக்களிக்க முடியும் என்றும் தெரிவத்தாட்சி அலுவலர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், இதுவரையில் அஞ்சல் வாக்களிக்காத அஞ்சல் வாக்காளர்களுக்கு இவ்விடயம் தொடர்பில் தெரியப்படுத்துமாறும் அவர் கேட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக 9842 பேர் தகுதி பெற்றவர்களாக தேர்தல்கள் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது.
தபால் மூல வாக்களிப்புக்காக மட்டக்களப்பு, கல்குடா, பட்டிருப்பு ஆகிய தொகுதிகளில் 176 நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
தபால் மூல வாக்களிப்பிற்கு 3ஆம் திகதியும், 5, 6ஆம்திகதியும் ஒதுக்கப்பட்டிருந்தது.
ஆயினும் குறிப்பிட்டளவான அஞ்சல் வாக்குகள் இன்னமும் அளிக்கப்படாமலுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தேர்தல்கள் அலுவலகம் தெரிவித்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக 16 கட்சிகள் மற்றும் 30 சுயேட்சைக் குழுக்கள் போட்டியிடுகின்றன.
இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் முன்னணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈழமக்கள் ஜனநாயக கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஈழவர் ஜனநாயகக் கட்சி, ஜே.வி.பி, அகில இலங்கை தமிழர் மகா சபை, ஐக்கிய மக்கள் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, எமது தேசிய முன்னணி, ஜனநாயகக் கட்சி, முன்னிலை சோஷலிசக் கட்சி, ஜனசெத பெரமுன ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.
மட்டக்களப்பு மாட்டத்தில் ஐந்து உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக மொத்தமாக 368 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 1,72,499 பேரும், கல்குடா தொகுதியில் 1,05,056 பேரும், பட்டிருப்பு தொகுதியில் 87,612 பேருமாக மொத்தம் 3,65,167 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருப்பதாக மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஆர். சசீலன் தெரிவித்தார்.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில், கல்குடாவில் 115 நிலையங்களும், மட்டக்களப்பில் 199 நிலையங்களும், பட்டிருப்பில் 100 வாக்களிப்பு நிலையங்களும் என்ற அடிப்படையில் 414 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டவுள்ளன.(http://www.battinews.com/)
No comments:
Post a Comment